சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு உள்ளூர் இளம் பெண் முயற்சியாளர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களின் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த இளம் பெண் சிறு தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று (25) மாவட்ட செயலகத்திலே காலை 9 மணி தொடக்கம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான கே. கருணாகரனின் ஏற்பாட்டிலும் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரனின் தலைமையிலும் இடம்பெற்ற இந் நேர்முகத்தேர்வில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 இளம் பெண் முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதுபோன்று கூடிய பங்களிப்பினை செய்து கூடுதலான முயற்சிகளை வெளிக்காட்டும் இளம் பெண் முயற்சியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களுடைய முயற்சிகளுக்கேற்ற வகையில் அவர்களுக்கான புள்ளி நிரல்கள் இந் நேர்முகத்தேர்வு நிகழ்ச்சி குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந் நேர்முகத்தேர்வின் போது அவர்கள் பெற்ற பயிற்சிகள் , அனுபவங்கள், அவர்கள் வழங்குகின்ற அந்த உற்பத்தி துறை சார்ந்த தொழில் வாய்ப்புக்கள், அவர்களுடைய கணக்கு வைப்பு முறைகள் , வருமான மார்க்கம் என்பன பரீட்சிக்கப்பட்டன.

இந் நேர்முகத்தேர்வில் இருந்து 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களைப் பெறுவோர் தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியான போட்டிக்கு அனுப்பப்படவுள்ளனர். இவர்களைப்போன்று பல சிறந்த இளம் பெண் முயற்சியாளர்கள் உருவாக வேண்டும் என்று இலங்கை அரசு பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours