நூருல் ஹுதா உமர்

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருதில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், முகக்கவசத்தை முறையாக அணியாதவர்கள், சுகாதார வழிமுறைகளை பேணாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோர் மீது அண்டிஜென் பரிசோதனை நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தாரின் நெறிப்படுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பல் நோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களத்தின் பயிலுநர்கள் அடங்கிய குழு சாய்ந்தமருது பிரதேசத்தில் கொவிட்-19 கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் பல பகுதிகளில் குறித்த நேரத்திற்குள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்களின் அத்தியாவசியத் தேவை நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட காலங்களில் சுகாதார வழிமுறைகளை பேணாத இரண்டு கடைகள் மூடப்பட்டதுடன் முகக் கவசங்களை முறையாக அணியாதவர்கள் மீது அண்டிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினரால் வாகனச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இனிவரும் காலங்களில் இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் "வரும் முன் காப்போம் நாமும் பாதுகாப்பாக இருந்து ஏனையோரையும் பாதுகாப்போம்" என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours