மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சுமார் 40 வருடகாலத்திற்கு மேலாக குன்றும் குளியுமாக மக்கள் போக்குவரத்திற்கு சிரமமாக காணப்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் வீதி தொடக்கம் குடும்பிமலை வரையான சுமார் 38 கிலோமீற்றர் வரையான வீதிக்கான காபட் இடும் வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வானது இன்று (10) திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி
அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ
அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிரான் பிரதேச செயலக பிரிவில் மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குளியுமாக காணப்பட்ட குறித்த வீதியினை மிக விரைவாக காபட் இட்டு புணரமைத்துத்தருமாரு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
நிதியமைச்சர் பசில் ரோகன ராஜபக்ஷ அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வீதி பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ மற்றும் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சா அவர்களின் அனுசரணையுடன் கிரான் பாலத்தில் இருந்து குடும்பி மலை வரை மற்றும் இலுப்படிச்சேனை சந்தியில் இருந்து கிரான் 5ம் கட்டை சந்தி வரையிலான 38 கிலோ மீட்டர் நீளமான வீதி 1,454 மில்லியன் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இன்று நடைபெற்ற குறித்த வேலைத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் மற்றும் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த ஆகியோர் கலந்துகொண்டு குறித்த வீதிகளுக்கான ஆரம்பக்கட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக தரவைக்குளம் இராணுவ முகாமின் பிரிக்கேடியர் றுவான் விஜயசூரிய உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பக்கட்ட குறித்த வீதிக்கான பணிகளை ஆரம்பித்துவைக்கும் முகமாக கொங்கிறீட் இட்டு ஆரம்பித்து வைத்ததுடன், அதிதிகளால் வீதிக்கான நினைவுப்படிகம் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன், நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்துகொண்டவர்ளுக்கு இதன் போது அப்பகுதி கிராம மக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கிவைக்கப்பட்டது.
நாளாந்தம் குறித்த வீதியால் பயணித்துவரும் 14 பாடசாலையினை சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட 9 அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மட்டுமல்லாது மூவாயிரத்தி ஐநூறிற்கும் மேற்பட்ட 18 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மக்களும், 5000 மேற்பட்ட வயல் நிலங்களில் வேளாண்மை செய்யும் விவசாயிகளும், அன்றாடம் கூலித்தொழில் மற்றும் சுயதொழிலை மேற்கொள்வதற்காக குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் வெள்ள காலத்தில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது வாழ்வாதார ஜீபனோபாயத்தை நடாத்திவந்ததுடன், குறித்த வீதி காபட் இடப்பட்டதும் இவர்களது வாழ்வாதார ஜீபனோபாயம் மேன்மையடைய வாய்ப்பேற்படுவதாகவும், குறித்த வீதியை செப்பனிட்டுத்தருவதையிட்டு அப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours