( வி.ரி.சகாதேவராஜா)
 

கிழக்கில் ஆளணியின்படி சுமார் 24ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. தற்போது 20ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். சுமார் 4000ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவியது.எனினும் அண்மையில் 3ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கிழக்கு பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம்.

இவ்வாறு, கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக தெரிவித்தார்.

சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனை நடாத்திய நூல் வெளியீட்டுவிழாவில் பிரதமஅதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக கௌரவஅதிதியாக  கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். அங்கு செயலாளர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நூல் வெளியீட்டுவிழா சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்(தேசிய பாடசாலை) கடந்த வியாழனன்று நடைபெற்றது.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள பொதுப்பரீட்சைகளில் மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் செயற்றிட்டத்தின்கீழ் இழந்தகல்வியை மீட்கும் கொவிட்19 விடுமுறைக்கான செயற்றிட்டமாக சம்மாந்துறை கல்வி வலயம் தயாரித்த தரம் 11க்கான விஞ்ஞானம் மற்றும் கணித நூல்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தரம்4க்கான கணிதம் தமிழ்மொழி சுற்றாடல்சார் செயற்பாடுகளடங்கிய நூல் ஆகிய மூன்று சுயகற்றல் நூல்கள் வெளியிட்டுவைக்கப்பட்டன. கூடவே இ;வ்வாண்டுக்கான வலய வருடாந்த அமுலாக்கத்திட்ட கைநூலும் வெளியிட்டுவைக்கப்பட்டது. விழாநிகழ்வுகளை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்தளித்தார்.

அங்கு கல்விச்செயலாளர் திசாநாயக்க மேலும் உரையாற்றுகையில்:

நீங்கள் அனைவரும் கல்விப்புலத்தில் செய்கின்ற சேவையை கடமையாக கருதமுடியாது. அது ஓர் உன்னதமான ஒரு சமுகசேவை ஆகும். ஒரு பாடசாலையைத் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடிவிடலாம் என்பார்கள். சுகாதாரத்திற்கு அடுத்தபடியாக கல்விக்கு பில்லியன் கணக்கில் செலவுசெய்கிறார்கள். நாம் நித்திரை செய்வதற்கு முன்னர் அன்றைய கடமையை ஒழுங்காகச்செய்தோமா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். சுய கேள்வியை எழுப்பவேண்டும்.

கல்விக்காக செலவழிக்கும் பில்லியனுக்கு கைமாறாக நாம் என்ன உற்பத்திசெய்திருக்கிறோம். துரதிஸ்டவசமாக கிழக்கு தொடர்ந்து 9வது இடத்தில் இருந்துவருகிறது. எமது பாரம்பரிய சிந்தனைகளை மனப்பாங்கை மாற்றவேண்டும். புதிதுபுதிதாக சிந்திக்கவேண்டும். கல்வியில் நல்லதொரு மாற்றத்தைக் கொணர அனைவரும் சிந்திக்கவேண்டும். திட்டங்கள் வகுத்து அதன்படி உழைக்கவேண்டும்.பாடுபடவேண்டும். 'அனைவருக்கும் கல்வி' என்பது யுனிசெவ் தொடக்கம் பல நாடுகளுக்கும் பொதுவான வாசகமாகவுள்ளது.' சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி' என்பதே எனது வாசகம்.

எனது தாய் மாகாணமான கிழக்கு மாகாணம் இன்னும் 3வருடங்களில் 5வது இடத்தை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு.அதற்காக இரவில் நீண்டநேரம் சிந்திக்கிறேன். நீங்கள் அனைவரும் சிந்தித்து ஒத்துழைக்கவேண்டும். தலைவர்கள் நீங்கள். மாணவர்களுக்கு உதவவேண்டும். அவர்களை ஊக்குவிக்கவேண்டும். கிழக்கில் பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாதுள்ளனர். மேசன் தச்சு வேலை செய்கின்றனர்.அப்படிஎனின்  எங்கோ ஒரு தவறு நடந்திருக்கிறது. இல்லையா? அதனை ஆராயவேண்டும்.

ஆசிரியர் சம்பளப்பிரச்சினை தீர்வு
இலங்கையில் கடந்த 2மாதங்களாக பயங்கர நெருக்கடிநிலை கல்வியில் இருந்தது. அதாவது சம்பள முரண்பாட்டை முற்றாக நீக்கவேண்டி இடம்பெற்ற தொடர்போராட்டமே அந்த நெருக்கடிநிலைக்கு காரணம்.
தற்போது அரசாங்கத்தினால் அது தீர்வுகாணப்பட்டு முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது.அதிபர் ஆசிரியர்களுக்கு அது மகிழ்ச்சி. சந்தோசம். அது கட்டாயம் செய்யப்படவேண்டும்.நடந்துள்ளது. எனவே இனி எந்தக்காரணமும் சொல்லித்தப்பிக்கமுடியாது. எந்தவிதத்திலும் தப்புவதற்கான காரணம் சொல்லமுடியாது. நன்றாக படிப்பிக்கவேண்டும்.நல்ல பெறுபேற்றை உயற்பத்திசெய்யவேண்டும்.

ஆனால் இப்போது இன்னுமொரு சிறுவர்க்கத்தினர் தங்களுக்கு சம்பளம் போதாது.ஆசிரியர்களுக்குக்கூட எமக்குக்குறைய என்று.எனவே எங்களுக்கும் சம்பளம்கூட்டவேண்டும் என்று கோசமெழுப்ப தொடங்கியுள்ளனர்.
ஒரு வலயக்கல்விப்பணிப்பாளர் என்னிடம் சிரேஸ்டஆசிரியரை விட தனக்கு சம்பளம் குறைவாக உள்ளது என கவலைப்பட்டார். கவலைப்படவேண்டாம் கடந்த 20-30 வருடங்களாக அவர்கள் குறைந்த சம்பளத்தில்தான் வாழ்ந்தவர்கள். இன்றுதான் சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளார்கள் என்று சொன்னேன்.

கல்விப்புலத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை. ஏன் சரியான ஆராய்ச்சி இல்லை. எம்மிடையே ஆராய்ச்சியாளர்கள் உருவாகவில்லை. பிரச்சினைகள் ஆராய்ச்சிசெய்யப்படவேண்டும். இதனால் பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே தொடர்ந்துள்ளன. பிரச்சினைகளை தீர்க்க ஆராய்ச்சிகள் செய்ய இப்போது அரசாங்கமும் விண்ணப்பங்களைகோரியுள்ளது.

கிழக்கு கல்வி உயரும்.!
நீங்கள் அனைவரும் கல்வியியலாளர்கள். நான் கல்வியியலாளன் அல்ல. நிருவாகசேவையைச்சேர்ந்தவன். நான் 2011 மார்ச் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு வந்தவன். இதுவரை இங்குதான் பணியாற்றுகிறேன்.
2017இல் நான் கிழக்கு மாகாண கல்விஅமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டேன். ஆனால் எந்தவித நியாயமான  காரணமுமில்லாமல் பதவியிலிருந்து 8மாதங்களில்  நீக்கப்பட்டேன். அதே தரப்பினர் இன்று மீண்டும் கிழக்கு கல்வியமைச்சிற்கு என்னை செயலாளராக நியமித்துள்ளனர்.

கிழக்கு மாகாண கல்வியை முன்னேற்றவேண்டும்.தினமும் 9மணிநேர வேலையின்பின்னர் நித்திரைக்குசெல்லமுன் பலமணிநேரம் சிந்திக்கிறேன். மீண்டும் மீண்டும் அதிகமாக சிந்திக்கிறேன்.எப்படி  கிழக்குக் கல்வியை முன்னுக்கு கொண்டுவரலாம் என்று. நீங்களும் சிந்தியுங்கள்.  ஏதாவது அகப்பட்டால் அதனைத்தெரிவியுங்கள். முன்மொழிவுகள் பரிந்துரைகள் ஆலோசனைகளை நீங்கள் முன்வைக்கலாம்.வரவேற்கப்படும். தயவுசெய்து ஒன்றுபடுங்கள் ஒத்துழையுங்கள்.நிச்சயமாக கிழக்கு கல்வியை உயர்த்தமுடியும். என்றார்.

தொடர்ச்சியாக நூல்அறிமுகவுரைகளை ஆசிரியஆலோசகர்களான எம்.எம்.எம்.ஜௌபர் ரி.எல்.றைஸ்டீன் ஏ.ஜி.எம்.கிஷோர் ஆகியோர் நிகழ்த்தினர் . பின்னர் 3நூல்களையும் பணிப்பாளர் நஜீம் அதிதிகளிடம் வழங்கி வைத்து வெளியிட்டுவைக்கப்பட்டன.பின்னர் அவை அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக மற்றும் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் பொன்னாடைபோர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அதன்பின்னர் அவர்களது உரைகள் இடம்பெற்றன.

மாணவர்களின் மூவின கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. கல்விஅபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எ.எல்.எ.மஜீட் நன்றியுரையாற்றினார்.

வி.ரி. சகாதேவராஜா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours