(காரைதீவு சகா)
சித்தர்களின் குரல் அமையத்தின் உலகளாவியதலைவர் ஸ்ரீ சிவசங்கர் ஜீயின் பாரிய ஏற்பாட்டில் அடர்ந்த வனாந்தரத்தில் அமையப்பெற்ற காளிஅம்பா சிலையின்முன்னால் இம்மாபெரும்யாகம் நேற்றுமுன்தினம் நிகழ்த்தப்பட்டது.
இதுவரை உலகில் எங்கும் நடந்திராத அளவுக்கு ஒரு பிரமாண்டமான சண்டிஹோமத்தை யாழ்ப்பாணம் இணுவில் தர்மசாஸ்தா குருகுல வேதவாத்தியார் சிவகாமசதுர்வேத சக்கரவர்த்தி மஹாதேவ சிவஸ்ரீ ஸ்ரீ வத்சாங்க குருக்கள் தலைமையிலான வேத பண்டிதர்கள் நிகழ்த்தியமை கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
சித்தர்களின்குரல் சமஸ்தான் ஆஸ்தான சிவாச்சாரியர் உலகப்புகழ்பெற்ற பிரபல வேதசாஸ்திர விற்பன்னர் ஸ்ரீ வத்சன் குருக்கள் தலைமையில் ஸ்ரீ சிவசங்கர் ஜீ முன்னிலையில் சித்தர்களின் குரல் அமைய தலைவர் ஆதித்தன் ,உபதலைவர் மனோகரன் , சிவாயநம மகேஸ்வரன் ஜீ மற்றும் சித்தர் தொண்டர்கள் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை எட்டுமணிநேரம் தொடர்ச்சியாக யாகத்தை நிகழ்த்தினர்.
அசுரர்களை அழித்து தர்மத்தைக்காக்க பல்வேறு வடிவங்களை எடுத்திருக்கும் ஆதிபராசசக்திதேவியின் வாவம்தான் சண்டிமஹாதேவி. அங்கு யாகம் நடைபெற்ற அதேவேளை சமகாலத்தில் காளிமஹாதேவிக்கு அபிஸேகமும் நடைபெற்றது.
அண்டசராசரத்தை ஒட்டுமொத்த இயக்கமாக கட்டுப்படுத்தும் 13மாபெரும் சக்திகளை திருப்பதிப்படுத்திப் பூஜிப்பதற்காக சண்டிஹோமத்தில் பஞ்சகவ்வியம், சந்தனாதிதைலம், பஞ்சாமிர்தம் ,மஞ்சள்தூள் ,நெய், கரும்பு, பன்னீர் ,தேன் உள்ளிட்ட 13அபிஷேகத்திரவியங்கள் ஆகுதியாக்கப்பட்டன.
கலியுக நாதஸ்வர இசையுலக சக்கரவர்த்தி கலைமாமணி ஈழநல்லூர் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர மேளதாள வாத்தியம் அடர்ந்தகானகத்தை இசைமழையில் நனையவைத்தது.
வெட்டிவேரில் உருவாக்கப்பட்ட 64வகை உபசாரங்கள் அங்கு படைக்கப்பட்டன. கானகத்தில் இனிமையான வாசனை கமழ்ந்தது.
இறுதியாக வஸ்திரதானம் வழங்கப்பட்டதோடு மற்றும் வனத்திலுள்ள அத்தனை தேவதைகளுக்கும் வனபோஜனம் வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours