(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உயிர் காப்பு சங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு பிரிவு என்பன இணைந்து நடாத்தும் உயிர் காப்பு சான்றிதழ் இலவச பயிற்சிநெறி ஒன்று நேற்று (15) ஆந்திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள இளைஞர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை கடந்த (08) ஆந் திகதி வெபர் மைதான உள்ளக நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றிருந்தது.
வேலையற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைசினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இத்திட்டம் நாடுபூராகவும் மாகாண மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்திற்கான பயிற்சியாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றிருந்த நிலையில் தெரிவு செய்யப்படும் 30 பயிற்சியாளர்களுக்கான 9 நாள் கொண்ட பயிற்சி நெறி நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சிநெறியில் தேற்சி பெறுவோர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான உயிர்காப்பு அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத்துறையில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் அதிகமாக காணப்படுவதினால் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்து அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுக் கொள்பவர்கள் இலகுவாக தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவிற்கு பொறுப்பாக உள்ள மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன்,
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன்,
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பீ.விவேகானந்தன், தேசிய இளைஞர் படையணியின் வாழைச்சேனை அலுவலகத்தின் பொறுப்பாளர் மேஜர்.தமீம், பயிற்றுவிப்பாளர் ஐ.பி.விஜயவர்த்தன, இலங்கைக்கான உயிர்காப்பு சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர், மாவட்ட செயலக விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours