(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களுக்கான அலகுகளை அமைத்துவினைத்திறனுடன் செயற்படுத்தி வரும் அதிபர்கள், பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிரதேசசெயலாளர்களை கெளரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் குழுக்களின் எதிர்கால திட்டங்கள்
மற்றும்
இடைவிலகல் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து செயற்படுத்துவது தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (01) திகதி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

மாவட்டத்தில் உள்ள பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழு அலகுகளின் செயற்பாட்டினை ஊக்குவித்து சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவற்றின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் கல்வி அமைச்சின்  “சுரெக்கும்பவ" சுற்றுநிருபத்திற்கமைவாகவும் நாடளாவிய ரீதியில்
சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் திறம்பட முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இது தொடர்பான வேலைத்திட்டங்கள் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், வலயக்கல்விப்பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours