( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு.ஓர்க் இணையக்குழுவானது, காரைதீவு மண்ணைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் 03 கடின பந்துக் கழகங்களான காரைதீவு
விளையாட்டுக் கழகம், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மற்றும்
காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கிடையே ஏற்பாடுசெய்த
“காரைதீவு கிறிக்கட் கார்ணிவல் - 2025” எனும் முத்தரப்பு கிறிக்கட்
சுற்றுப்போட்டியானது, இலங்கையின் 77வது சுதந்திர தினமான 2025.02.04 அன்று
விபுலானந்தா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக
இடம்பெற்றது.
இச்
சுற்றுப்போட்டியானது, புலம்பெயர்ந்தும் காரைதீவு மண்ணை மறவாத அவுஸ்திரேலியா
வாழ் காரைதீவு மக்கள் ஒன்றியம் (AUSKAR) மற்றும் ஐக்கிய இராச்சியம் வாழ்
காரைதீவு மக்கள் ஒன்றியம் (KAUK) ஆகிய இரு அமைப்புக்களின் பூரண அனுசரணையில்
ஏற்பாடு செய்திருந்தது.
காரைதீவு.ஓர்க்
தலைவர் லோ.சுலெக்சன், காரைதீவு கிறிக்கெட் கார்ணிவல் தலைவர் தி.
லாவண்ணியன் மற்றும் இணைப்பாளர் .ந.சத்தியஜித் ஒருங்கிணைப்பிலும்,
காரைதீவு.ஓர்க் இணையக் குழு உறுப்பினர்களின் பங்களிப்புடனும்
இச்சுற்றுப்போட்டிகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
மிகவும்
விறுவிறுப்பாக இடம்பெற்ற ஆரம்பநிலைப் போட்டிகளின் அடிப்படையில்
இறுதிப்போட்டிக்கு காரைதீவு விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவு ஜொலி
கிங்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகம்
07 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கன்னி வெற்றியாளராக வெற்றிவாகை சூடினர்.
இவ்விறுதிப்
போட்டியில் காரைதீவு வரலாற்றில் முதன்முறையாக இளஞ்சிவப்பு நிற
கடினப்பந்து(Pink hardball) பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு
கிரிக்கெட் கார்ணிவல் தலைவர் தி.லாவண்யன் தலைமையில் நடைபெற்ற இந்
நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.
ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ
அதிதிகளாக எஸ். பார்த்தீபன் (உதவி பிரதேச செயலாளர்) அ. சுந்தரகுமார்
(செயலாளர், பிரதேச சபை, காரைதீவு), . ஆர். எஸ். ஜகத் (பொறுப்பதிகாரி,
பொலிஸ் நிலையம், காரைதீவு), திரு. ம. சுந்தரராஜன் (அதிபர், விபுலானந்தா
மத்திய கல்லூரி) ஆகியோரும் விசேட அதிதியாக ஒஸ்கார் அமைப்பின் போசகரும்
காரைதீவின் முதல் கணக்காளருமான . தங்கராசா பிரகதீஸ்வரர் , ஒஸ்கார்
அமைப்பின் பிரதிநிதிகள், காரைதீவு பிறிமியர் லீக் நிபுணத்துவ ஆலோசகர்கள்,
காரைதீவு. ஓர்க் ஸ்தாபக உறுப்பினர்கள், காரைதீவு. ஓர்க் ஆலோசகர்கள்,
விளையாட்டுக் கழங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற காரைதீவு விளையாட்டு கழகத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை பிரதம அதிதி சிவ.ஜெகராஜன் வழங்கி வைத்தார்
றன்னஸ்அப்
கிண்ணத்தை ஜொலி கிங்ஸ் விளையாட்டு கழகத்திற்கு அதிதிகளான ஒஸ்கார்
இணைப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார்
ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.
கிண்ணங்களுடன் பணப் பரிசும் வழங்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours