-அஸ்லம் எஸ்.மெளலானா
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில்ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழுவின் முதலாவது கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றுள்ளது.
இதன்போது அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்திற்கும் கட்சி சார்பில் நிறுத்தப்பட வேண்டிய தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான அடிப்படை விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தலுங்கான முன்னோடி செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கட்சி ஆதரவாளர்களை தயார்படுத்துவது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த விஷேட குழுவின் உறுப்பினர்களாக கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பிரதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், உச்சபீட உறுப்பினர் எம்.டி. சப்ராஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours