( வி.ரி.சகாதேவராஜா)


வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனங்கள் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பினையடுத்து, காந்தி பூங்காவில் ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள், “ அரச நியமனத்தினை உறுதிப்படுத்து”, “காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே”, “அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே”, “வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்” போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பல்வேறு கனவுகளுடன் பல கஷ்டங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்புகளை முடித்துள்ளபோதிலும், இதுவரை தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை போன்ற என இதன்போது பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, அங்கிருந்து பழைய கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours