மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள "தையல் நிலையம்" மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபரினால் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் "சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக குறித்த தையல் நிலையத்தை அமைப்பதற்கு பிரதான அனுசரனையாளராக திகழும் சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எஸ்.ரமணதாஸ் மற்றும்  திருமதி.ரமணதாஸ், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, வளர்ந்து வரும் இளம் தொழிலதிபரும் ஊடகவியலாளருமான ஜெபி ஜெனார்த்தனன்,  சமூக செயற்பாட்டாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் சிவகுமாரி செல்வராசா, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் (SEDD) திருமதி.ஜசோதா ராஜசேகரன், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் (NEDA) திருமதி.ஏ.எல்.எஸ்.ஹய்றியா, சமூக செயற்பாட்டாளர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராஸாகிப், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வியாபார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர் நாகேந்திரன் கோகுலதாஸ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் தையல் துறையில் ஆர்வமுள்ள சுய தொழில் முயற்சியாளர்களது தொழில் முயற்சியினை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

"சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்" எனும் தொனிப்பொருளில் சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள "தையல் நிலையம்"  மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான சந்தைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கடைத் தொகுதியின் ஆறாம் இலக்க கடையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகளீருக்கென தனியான தையல் வர்த்தக நிலையங்கள் குறைவாக காணப்படுவதனை அவதானித்ததன் அடிப்படையிம் குறித்த வர்த்தக நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கு பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் தைத்தல், ஆரி வேக் செய்தல், தலையணை உறை தைத்தல் மற்றும் துணி வேக் தைத்தல் போன்ற மேலும் பல செயற்பாடுகள்  நேர்த்தியாக குறைந்த செலவில் வடிவமைப்பு செய்து  வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்நிலையம் செயற்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் தையல் கலையில் ஆர்வமுள்ள சுய தொழில் முயற்சியாளர்களுக்கான இலவச தையல் பயிற்சியினை சிறந்த வளவாளர்களை கொண்டு இங்கு மேற்கொள்வதற்கான முயற்சியினை தாம் மேற்கொண்டு வருவதாக சம்மேளனத்தின் தலைவர் உ.உதயகாந்த் (JP) இங்கு உறையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின்  தொழில் முயற்சியினை இனங்கண்டு அவர்களின் மேம்பாட்டினை நோக்காக கொண்டு இச்சங்கம் இயங்குகின்றமை மகிழ்ச்சியளிப்பதுடன், வெளிப்படைத் தன்மையுடன் சங்கங்கள் இயங்க வேண்டும் என்பதுடன், இச்சங்கம் முன்னுதாரணமாக பல்வேறு செய்ற்பாடுகளை முன்னெடுத்துவருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனமானது கடந்த ஒரு வருடமாக சுயதொழில் முயற்சியாளர்களது மேம்பாடு மற்றும் சமூக  மேம்பாடு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மிகவும் திறம்பட செயலாற்றிவருவதுடன் இம்முயற்சிக்கு சிவனருள் பவுண்டேசன் அமைப்பும் தமது அனுசரனையினை வழங்கி தையல் இயந்திரம் உள்ளிட்ட உபகரண தொகுதிகள் சிலவற்றையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours